Search This Blog

Sunday, March 27, 2016

தோழா - திரை விமர்சனம்



கழுத்துக்கு கீழ் முற்றிலும் செயல் இழந்த ஒரு கோடீஸ்வரன். சிறு திருட்டுக்காக சிறை சென்று பரோலில் வெளி வந்திருக்கும், குடும்பத்தில் மதிப்பிழந்த ஒரு இளைஞன். இவர்கள் இருவருக்குமான தோழமைதான் தோழா.

வாழ்க்கையில் பணம் இழந்தவன் மட்டுமே ஏழை என பொதுவாக சொல்லப்படுகிறான். ஆனால் பணம் இருந்தும் நினைத்த வாழக்கை வாழ முடியாமல் ஏங்கித் தவிக்கும் ஏழையாக நாகார்ஜுனா. இவரது கண்களும், நெத்தியுமே படம் முழுக்க நடித்திருக்கிறது. சந்தேகமே இல்லாமல் வேறு சாய்சே இல்லை அந்த பாத்திரத்திற்கு. அமர்க்களப் படுத்தியிருக்கிறார். மகிழ்ச்சியில் மனிதர் கண் கலங்கும் போது... நம் கண்களும் அவருடன் இணைந்து கொள்வதை பல காட்சிகளில் தவிர்க்க முடியவில்லை.

அடுத்து என்ன என்ற எந்த இலட்சியமும் இல்லாமல் இந்த நொடியை கொண்டாடும் இளைஞனாக கார்த்தி. இவரது நடிப்பில் எனக்கு பிடித்த முதல் படம் இதுவே... படம் முழுக்க உற்சாகமாக வலம் வருகிறார். இவரது உற்சாகம் நமக்கும் தொற்றிக் கொள்ள பின்னணி இசை சரியாக உதவி இருக்கிறது.

படம் இறுதி வரை போரடிக்காமல் ஃபீல் குட் உணர்வை நமக்கு தருவதில் கார்த்தி, நாகார்ஜுனாவின் நடிப்புடன் இணைந்து படத்தின் வசனங்களும் பக்க பலமாக உதவியிருக்கிறது.

காதல், தாய் தங்கை பாசம் என்றெல்லாம் குழப்பியடிக்க நிறையவே வாய்ப்புகள் இருந்தும், உடல் ஊனமுற்றவர்களை பரிதாபத்திற்குரியவராக காட்ட வாய்ப்பிருந்தும், அதை முழுக்க தவிர்த்து கரு சிதையாமல் கவனமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் வம்சி.

நம்முடன் இருக்கும் நட்பு, உறவுகளுக்கு நாம் ஒரு கேர் டேக்கராக இருக்க வேண்டும் என்ற உணர்வை, அதன் அவசியத்தை நிச்சயம் எதாவது ஒரு காட்சியிலாவது நீங்கள் உணர்வீர்கள்.

நாம போற இடத்துக்கு நம்ம மனசும் போகனும், பயம் இருந்தா காதல் அதிகம் இருக்குனு அர்த்தம்... இப்படி மனசுக்கு நெருக்கமான வசனங்களுக்காகவே இந்த ஃபிரண்ட மறுபடி போய் பாத்துட்டு வரனும்.
தோழா - நமக்கும்.

No comments:

Post a Comment