Search This Blog

Sunday, March 27, 2016

தோழா - திரை விமர்சனம்



கழுத்துக்கு கீழ் முற்றிலும் செயல் இழந்த ஒரு கோடீஸ்வரன். சிறு திருட்டுக்காக சிறை சென்று பரோலில் வெளி வந்திருக்கும், குடும்பத்தில் மதிப்பிழந்த ஒரு இளைஞன். இவர்கள் இருவருக்குமான தோழமைதான் தோழா.

வாழ்க்கையில் பணம் இழந்தவன் மட்டுமே ஏழை என பொதுவாக சொல்லப்படுகிறான். ஆனால் பணம் இருந்தும் நினைத்த வாழக்கை வாழ முடியாமல் ஏங்கித் தவிக்கும் ஏழையாக நாகார்ஜுனா. இவரது கண்களும், நெத்தியுமே படம் முழுக்க நடித்திருக்கிறது. சந்தேகமே இல்லாமல் வேறு சாய்சே இல்லை அந்த பாத்திரத்திற்கு. அமர்க்களப் படுத்தியிருக்கிறார். மகிழ்ச்சியில் மனிதர் கண் கலங்கும் போது... நம் கண்களும் அவருடன் இணைந்து கொள்வதை பல காட்சிகளில் தவிர்க்க முடியவில்லை.

அடுத்து என்ன என்ற எந்த இலட்சியமும் இல்லாமல் இந்த நொடியை கொண்டாடும் இளைஞனாக கார்த்தி. இவரது நடிப்பில் எனக்கு பிடித்த முதல் படம் இதுவே... படம் முழுக்க உற்சாகமாக வலம் வருகிறார். இவரது உற்சாகம் நமக்கும் தொற்றிக் கொள்ள பின்னணி இசை சரியாக உதவி இருக்கிறது.

படம் இறுதி வரை போரடிக்காமல் ஃபீல் குட் உணர்வை நமக்கு தருவதில் கார்த்தி, நாகார்ஜுனாவின் நடிப்புடன் இணைந்து படத்தின் வசனங்களும் பக்க பலமாக உதவியிருக்கிறது.

காதல், தாய் தங்கை பாசம் என்றெல்லாம் குழப்பியடிக்க நிறையவே வாய்ப்புகள் இருந்தும், உடல் ஊனமுற்றவர்களை பரிதாபத்திற்குரியவராக காட்ட வாய்ப்பிருந்தும், அதை முழுக்க தவிர்த்து கரு சிதையாமல் கவனமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் வம்சி.

நம்முடன் இருக்கும் நட்பு, உறவுகளுக்கு நாம் ஒரு கேர் டேக்கராக இருக்க வேண்டும் என்ற உணர்வை, அதன் அவசியத்தை நிச்சயம் எதாவது ஒரு காட்சியிலாவது நீங்கள் உணர்வீர்கள்.

நாம போற இடத்துக்கு நம்ம மனசும் போகனும், பயம் இருந்தா காதல் அதிகம் இருக்குனு அர்த்தம்... இப்படி மனசுக்கு நெருக்கமான வசனங்களுக்காகவே இந்த ஃபிரண்ட மறுபடி போய் பாத்துட்டு வரனும்.
தோழா - நமக்கும்.

Sunday, March 06, 2016

கணிதன் - திரை விமர்சனம்



கல்விங்கறது நம்ம நாட்டை பொருத்தவரை அறிவு வளர்ச்சிக்கான, வேலைக்கான விசயம்ங்கறதையும் தாண்டி... அது நம்ம அடுத்த சந்ததிக்கான வாழ்வாதாரமாவும் இருக்கு.

நாமதான் படிக்கல அதனாலதான் நம்மால் முன்னேற முடியல... நம்ம பையனையாவது நல்லா படிக்க வச்சு பெரிய ஆளாக்கனும்ங்கற கனவோட, அதுக்காக இருக்கற சொற்ப்ப சொத்தையும் வித்து, தாலிக்கொடி தங்கத்தை கூட மஞ்சக்கொடி கட்டிக்கிட்டு கழட்டி வித்து, நம்ம மானமே போனாலும் பரவால நம்ம பையன் தலை நிமிர்ந்து நிக்கனும்னு கண்டவன் கால்லயும் விழுந்து கடன் வாங்கி... இப்படி எப்பாடு பட்டாவது தன் பிள்ளைக்கு நல்ல வாழ்வாதாரத்த ஏற்படுத்தி கொடுத்துடனும்னு துடிக்கற பெற்றோர்கள் நிறைந்த நாடு இது.

அது மட்டுமில்ல நம்மல நம்பிதான் நம்ம குடும்பம் இருக்கு, நமக்காகத்தான் பல அவமானங்களையும் நம்மல பெத்தவங்க பட்ருக்காங்கனு புரிஞ்சுகிட்டு... பிடிக்காத வேலைனாலும், செய்யற வேலைய விட பல மடங்கு சொற்ப சம்பளம்னாலும், சுயமரியாதைக்கு இழுக்கு வரும் அசிங்கத்தையும் அவமானத்தையும் தினம் தினம் வேலைல சந்திச்சாலும் குடும்பத்துக்காக எல்லாத்தையும் பொறுத்து கிட்டு் பல்ல கடிச்சுகிட்டு வேலை செய்யும் இளைஞர்களும் நிறைந்த நாடு.

 முறையா படிச்சவனுக்கே இங்க போட்டிக்கு நிறைய ஆளுங்க இருக்காங்க... இதுல கண்ணுக்கு தெரியாத எதிரியா.. கல்வி சான்றிதழையே போலியா காசு கொடுத்து வாங்கினவனும் சேர்ந்துட்டா? யாரோ ஒரு உண்மையான பட்டதாரிக்கு கிடைக்க வேண்டிய வேலை தான அந்த போலிக்கு கிடைச்சிருக்கும்....
இந்த மாதிரியான நபர்களால எத்தனை பெற்றோர்களோட, இளைஞர்களோட கனவு சிதைஞ்சுருக்கும்.. வாழ்க்கை திசை மாறி இருக்கும். இதுக்கு காரணம் அந்த போலிதான்னு கூட அந்த குடும்பத்துக்கு தெரியாது. :( :(

இந்த விசயத்தை கருவா எடுத்துகிட்டு வந்திருக்க படம்தான் கணிதன். லோக்கல் சேனல்ல ரிப்போர்ட்டரா வேலை பார்க்கும் அதர்வாவுக்கு பிபிசில ரிப்போர்ட்டர் ஆகனும்ங்கறதுதான் கனவு. பிபிசி இண்டர்வியூல அவர் செலக்ட் ஆகி அவர் சர்ட்டிஃபிகேட்லாம் வெரிஃபிகேனுக்கு போக. அதுல அவர் தன் சர்ட்டிஃபிகேட்ட வச்சு பேங்கல லோன் வாங்கி மோசடி செஞ்சதா தெரிய வர, போலீஸ் அவர அரெஸ்ட் பன்ன... இந்த பிரச்சினைல இருந்து அவர் எப்படி வெளிய வரார், உண்மையான குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கறார்ங்கறதுதான் கதை.  அதர்வா முரளி தேர்ந்தெடுக்கற கதைலாம் வித்யாசமா மட்டுமில்லாம தேவையானதாவும் இருக்கு. படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலயே கதைக்கு வந்திடுது.... இதெல்லாம் நிஜத்துல இவ்லோ வேகமாவா நடக்கும்னு நம்ம மூளை யோசிக்கறதுக்குள்ளயே பரபரன்னு நகருது. போலி சான்றிதழ் சம்பந்தப்பட்ட நெட்வொர்கை காட்டும் காட்சிகள் அருமை.  அதர்வா + இன்னும் நாலு பேர்கள அவ்லோ வேகமா கைது செஞ்சு கோர்ட்ல நிறுத்துன போலீஸ் அதுக்கப்புறம் உண்மையான குற்றவாளிகளை பத்தின செய்தி எல்லா மீடியாலயும் வந்த பிறகும் எங்க போனாங்கன்னே தெரியல... அப்புறம் பிற்பகுதில தேவை இல்லாத பிறந்த நாள் கொண்டாட்டம்.. பாட்டுனு வரத தவிர்த்திருக்கலாம். சில லாஜிக்கள் சிக்கல்கள் இருந்தாலும், வெகு நிச்சயமா தவிர்க்கவே கூடாத படம் இது.