Search This Blog

Thursday, October 28, 2010

மனதோடு - சிறுகதை

விடியற்காலையிலேயே அந்த கிராமம் சோகமுகம் காட்டியது.

நேற்று வரை கந்தசாமி என்று அழைக்கப்பட்ட 48 வயதான அந்த நபர் வாய்பிழந்து இறந்து கிடந்தார். தலை பலமாக தாக்கப்பட்டிருந்தது. அதில் இருந்து இரத்தம் கசிந்து உறைந்திருந்தது. ஈக்கள் மும்முரமாக அவற்றின் பணியினை அந்த வீட்டில் செய்து கொண்டிருந்தன. 

கந்தசாமியின் மனைவி அழுதழுது ஓய்ந்து போய் அமைதியாக சுவரோரம் தலையை சாய்த்து அமர்ந்திருந்தார்.

"சொல்லும்மா என்ன ஆச்சு" இன்ஸ்பெக்டர் விசாரனையைத் துவக்கினார்.

"சார் ஒரு வாரத்துக்கு முன்னாடி எனக்கும் என் புருஷனுக்கும் தகராறு சார். அதனால பக்கத்து தெருல இருக்கற என் பொண்ணு வீட்டுக்கு போயிட்டேன் சார். இன்னிக்கு விடிகாலைல இப்படி ஒரு நியூஸு சார்."

என்று விசும்பினார். அழுகை மெலிதாக எட்டிப்பார்த்தது.

"சரி ஏன் உன் புருசனை கொன்ன சொல்லு"

அவள் ஓவென்று அழ ஆரம்பித்தாள். புருசன் இறந்ததற்கு அலட்டிக்கொள்ளாத அவள் இப்படி இன்ஸ்பெக்டர் கேட்டவுடன். மிகுதியாக அதிர்ந்தாள். அருகில் இருப்பவர்கள் யாராவது துணைக்கு வரமாட்டார்களா என பார்த்தாள்.

"சார் சார். நான் எதுக்கு சார் என் வூட்டுக்காரர கொலை பண்ணனும். அவருக்கும் எனக்கும் அடிக்கடி தகராறு வரும்தான் சார். ஆனா கொலை பண்ற அளவுக்கு எல்லாம் எனக்கு தைரியம் கிடையாது சார்"

"உன் புருசன் என்ன பண்ணிட்டிருந்தார்"

"செங்கல் சூளையில வேலைக்கு போயிட்டு இருந்தார் சார்."

"அங்க எதாவது தகராறு"

"எப்பவும் யார் கிட்டயாவது தகராறு பன்ற ஆளுதான் சார் என் புருசன். தெரியலை சார் என்னாச்சுன்னு"

இன்ஸ்பெக்டர் அவரது விசாரனையின் அடுத்த கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அதே நேரம்.. அந்தத் தெருவின் மூலையில் இருந்த கோவிலில் ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தான் அவன்.

அவன் வேறு யாருமல்ல இவன் தான்......

"என் பேரு கனேசனுங்க.. எனக்கு பதினைஞ்சு வயசு ஆகுது. கடந்த ஒரு வருசமா என்னைய பைத்தியம்னு இந்த ஊர் சொல்லிட்டு இருக்கு. சின்னப்பசங்கல்லாம் என் மேல கல்லடிச்சு விளையாடுவாங்க. ஆனா இந்த ஜனங்கதாங்க பைத்தியம். எல்லாம் காமப்பிசாசுங்க. என்னடா இந்த வயசுப்பையன் பேசுற பேச்சாடா இது. என்னடா பேசுற வயசுக்குத் தகுந்த மாதிரி பேசுடாங்கறீங்களா. என் கதையைக் கேட்டா. நீங்க அப்படி சொல்ல மாட்டீங்க.

ஆமாங்க. நான் என் தங்கச்சி எங்கம்மா அப்பான்னு. எவ்வளவு அழகான, பாசமான குடும்பம் தெரியுமா எங்களுது.

ஆனா.. ஆனா.. அதெல்லாம்.. ஒரு வருசத்துக்கு முன்னதான்.. இப்ப நான் ஒரு அனாதை."

கோவிலின் சுவரில் தலை சாய்த்து அமர்ந்திருந்த அவன் கண்களில் நீர் துளிர்த்தது.

"என்ன அதிர்ச்சியாயிட்டீங்களா. அதுக்கு காரணம்.... அதுக்கு காரணம்.. இது நான் யார்கிட்டயும் சொல்லாம... காலம் முழுக்க என்னோடயே போகனும்னு நினைச்ச இரகசியம். ஆனா இப்ப என்னயும் மீறி இதை என் மனசு யார்கிட்ட சொல்லுதுன்னே தெரியலைங்க எனக்கு."

மீண்டும் அவன் கண்களில் இருந்து நீர் துளிர்த்தது. பின் அவன் மனசு சிறிது நேரம் மெளனமாயிருந்தது.

"என் தங்கச்சிக்கு எட்டு வயசுதான் ஆகுது, ரொம்ப புத்திசாலி நல்லா படிப்பா.. எப்பவும் சுறுசுறுப்பா இருப்பா.. எங்க தெருவுக்கே செல்லக் குழந்தையா இருந்தா. அந்த தங்கச்சி திடீர்னு காணாம போயிட்டா. நாங்க தேடாத இடம் இல்லை. அவ கிடைக்கவே இல்லை. அடுத்த நாளும் நாங்க ஆளுக்கொரு பக்கமா போயி தேட ஆரம்பிச்சோம். தேடிக்கலைச்சு போய் தண்ணி குடிக்கலாம்னு ஆத்தங்கரை பக்கம் போனேன். அங்க ஒரு மூட்டை கரை ஒதுங்கி இருந்தது. எனக்கு மனசுல ஒரு நடுக்கம், சந்தேகம்.

கூடாது.. கூடாது எனக்கு இப்ப தோணின மாதிரி இருந்துடக் கூடாதுன்னு நினைச்சுகிட்டே. அந்த மூட்டையை பிரிச்சு பாக்கறேன்.

ஆ.. அது என் தங்கச்சியோட கொலுசேதான். போன மாசம் என்னோட முதல் சம்பாத்தியத்துல வாங்கிக் கொடுத்த கொலுசு அது. நான் வெள்ளிப் பட்டறைல வேலை செஞ்சேன்.

அவளோட உடம்பு ஒரு லுங்கில சுத்தி இருந்தது. அது அது... எங்க வீட்டு எதிர் வீட்ல குடியிருந்த ஆளோடது. அடிக்கடி அந்த ஆள் அதைக்கட்டி பாத்திருக்கேன். எப்ப பாத்தாலும் அந்தாளும் அவங்க வீட்டு பொம்பளையும் ரோட்டுல தகராறு பண்ணிக்குவாங்க. அப்புறம் அந்தம்மா கிளம்பி எங்கயோ போகும். அப்புறம் வாரம் பத்து நாளுக்கு வராது.

எனக்கு விசயம் என்னன்னு புரிஞ்சுடுச்சு. யாரோ வர்ர அரவம் கேட்டுச்சு. மறுபடியும் அந்த மூட்டையை ஒரு கல்லைப் போட்டு கட்டி நடு ஆறு வரைக்கும் இழுத்துட்டு போயி விட்டுட்டு வந்தேன்.

அப்புறம் எவ்வளவு நேரம் நான் கரைல உக்காந்து அழுதிட்டிருந்தேன்னு தெரியாது. தங்கச்சி நீ திடீர்னு ஆத்துல இருந்து எந்திருச்சி வந்துடும்மான்னு கதறினேன். எதாவது அதிசயம் நடக்கும்னு நம்பினேன்.

ஒரு வாரம் இதை ஜீரனிக்க முடியாத மாதிரி பித்து புடிச்ச மாதிரி திரிஞ்சேன். தேடும் படலம் நடந்துக்கிட்டே இருந்தது. ஒரு நாள் என் நாக்குல சனி உக்காந்திருந்திச்சு போல. எங்கம்மாகிட்ட.. இந்த விசயத்தை சொன்னேன்.

அவங்களும் அப்பாவும் கதறினாங்க துடிச்சாங்க. அவங்களால இதை தாங்கவே முடியலை. ரொம்ப நேரம் அழுதிட்டே இருந்தாங்க. மூனு பேரும் அழுதழுது நான் தூங்கிட்டேன். காலைல எந்திருச்சி பாக்கறேன். எங்கம்மாவும் அப்பாவும்... எங்கம்மாவும் அப்பாவும்...

எங்க வீட்டு உத்தரத்துல தொங்கிக்கிட்டு இருந்தாங்க..."

அந்த கோவிலின் இன்னொரு மூலையில் இருந்த தண்ணீரைப் பிடித்து சிறிது தொண்டையை நனைத்துக் கொண்டான் அவன். பேசுவது மனதாக இருந்தாலும் தொண்டை துக்கத்தால் வரண்டிருந்தது.

"மனிதர்களுக்கு காமம்ங்கறது ஒரு உணர்வு அவ்வளவுதான... தோ நான் இப்ப தாகம் எடுக்குதுன்னு தண்ணி குடிச்சனே அது மாதிரிதான. தாகம் எடுத்ததுன்னா தண்ணியதான குடிப்போம். வேற எதாவது கழிவுப் பொருளை குடிச்சிருவமா. அந்த ஆளோட காமத்தை வெளிப்படுத்த ஒரு பச்சை மண்ணுதான் கிடைச்சுதா"

கண்களில் நீர் பொலபொலவென கொட்டியது. அவனது உடல் மெலிதாக நடுங்கிக் கொண்டிருந்தது.

"இந்த ஆளோட காமத்துக்கு எங்க குடும்பமே பலி ஆயிடுச்சே. இதெல்லாம் வெளியே சொல்ற விசயமா. அப்படி சொல்லிட்டா.. என் தங்கச்சி...

என் தங்கச்சி... ஆத்மா எப்படி தவிக்கும். இப்படி மானம் போயிடுச்சேன்னு. அதான் மனசைக் கல்லாக்கிக்கிட்டு அந்தக் கல்லைதான் அவளுக்கு துணையா அந்த மூட்டைக்குள்ள போட்டு நடு ஆத்துக்கு இழுத்துட்டு போய் விட்டுட்டு வந்தேன். இன்னமும் அந்த ஆத்துக்கு அடில என் தங்கச்சி தூங்கிட்டு இருக்கா.

சமயம் பாத்துட்டே இருந்தேன் அந்தாளைப் பழிவாங்க.. இதோ இன்னிக்கு காலைல இன்னொரு கல்ல அந்தாள் தலைல போட்டேன்."

அவன் மெல்ல எழுந்து நடக்க ஆரம்பித்தான்.

"சொல்லுங்க.. காமம்ங்கறது உயிர்களை உருவாக்குவதற்காகவா? இல்லை உயிர்களை அழிப்பதற்காகவா?" என்றவாரே.. அருகில் இருந்த கோவில் கிணற்றில் குதித்தான் அவன்.

உண்மை மூழ்கிக்கொண்டிருந்தது.

22 comments:

  1. நெஞ்சை தொட்ட கதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மனதோடு ஒன்றி விட்ட கதை. ம்ம்ம்....

    ReplyDelete
  3. நன்றிங்க யாதவன்
    நன்றிங்க சித்ரா
    நன்றிங்க ரமேஷ்.

    ReplyDelete
  4. ரமேஷ்....செமங்க....

    கண்டிப்பா உயிர்களை அழிக்க இல்லங்க.....!

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ரமேஷ் நல்ல கதை! யதார்த்தமும் கூட!

    ReplyDelete
  6. ரொம்ப நன்றிங்க தேவா..

    ரொம்ப நன்றிங்க பாலாஜி

    ReplyDelete
  7. நல்ல கதைங்க.... ஒரே டிராஜடியா போச்சு...

    ReplyDelete
  8. நன்றிங்க அருண்

    ReplyDelete
  9. நன்றிங்க பாலா

    ReplyDelete
  10. கொஞ்சம் வலியான கதை அண்ணா .,
    ஆனா எல்லோருமே இறந்து போய்ட்டாங்க அப்படிங்கறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு .. அடுத்த தடவ காமெடி முயற்சி பண்ணுங்க .. ஏன்னா எனக்கு அழுவாச்சு கதை பிடிக்காது ..!!

    ReplyDelete
  11. கண்டிப்பா செல்வா முயற்சி பண்றேன்...

    ReplyDelete
  12. Child abuse... குழந்தைகளின் மீதான பாலியல் கொடுமைகளைக் கருவாகக் கொண்ட கதை. ஒரு கேடுகெட்டவனின் சபலம் ஒரு அழகான குடும்பத்தை அழித்துவிடுகிறது. கதை முழுக்க protagonist-ஆன அந்த சிறுவனே தான் செய்த கொலையை சுய வாக்குமூலம் போல சொல்லித் தீர்க்கிறான். Touching!

    // அவன் வேறு யாருமல்ல இவன் தான்...... // -> நல்ல எழுத்து நடை!

    இது ஒரு சமூக சிந்தனையுள்ள கதை. பாதிக்கப்பட்ட குடும்பமே அழிந்துவிடுகிறது என்று முடித்திருக்காமல், பாதிப்பை உண்டாக்கியன் எவ்வாறு அவன் சபலத்தால் சட்டத்தாலும், ஊர் மக்களாலும் தண்டிக்கப்படுகிறான் என்று முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    அத்துடன், உண்மையில் இது போன்று குழந்தை பாலியல் கொடுமை செய்பவர்களுக்கு ஒரு மிரட்டலாக இருந்திருக்கும்! மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வைத் தூண்டுவதாக அமைந்திருக்கும்!

    ReplyDelete
  13. யதார்த்தமான கதை

    ReplyDelete
  14. உங்களது முந்தைய கதைகளைக் காட்டிலும், இதில் எழுத்துநடை விளையாடுகிறது. மிக அருமை..! உண்மை சம்பவத்தை கற்பனைக்குட்படுத்தி எழுதியது சாமர்த்தியம். அதிலும், அந்த அண்ணனின் கதறல்களில் //தங்கச்சி நீ திடீர்னு ஆத்துல இருந்து எந்திருச்சி வந்துடும்மான்னு கதறினேன்// //உண்மை மூழ்கிக்கொண்டிருந்தது.
    // போன்ற வரிகளில் ததும்பும் கற்பனைகள் அருமை..! வாழ்த்துக்கள் நண்பரே..!

    -
    DREAMER

    ReplyDelete
  15. @மிதுன்

    கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க மிதுன்

    @கதிர்கா

    நன்றிங்க கதிர்கா

    @DREAMER

    ரொம்ப நன்றிங்க ஹரீஷ்.. ரொம்ப சந்தோசமா இருக்கு... நீங்க பாராட்டினது..

    ReplyDelete
  16. கதை ஒரு உயிர் இருக்கிறது. இந்த கதை இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போய் பிணமாக கிடைத்த இரண்டு குழந்தைகள் கதை போலவே இருக்கிறது.

    இப்படியும் சில காமுகன்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

    புத்திர சோகம் என்பது மிகவும் கொடியது என்று என் ஆசிரியர் சொல்லக் கேட்டு இருக்கிறேன்.

    வாழ்த்துக்கள் ரமேஷ்

    ReplyDelete
  17. கதை நடை அருமை. தொடருங்க பங்கு

    ReplyDelete
  18. நெஞ்சை வருடும் யதார்த்தமான திருப்பங்களுடன் கதை.
    அருமை நண்பரே..!

    ReplyDelete
  19. @karthikkumar

    நன்றிங்க பங்காளி

    @பிரவின்குமார்

    நன்றிங்க நண்பரே..

    ReplyDelete