Search This Blog

Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

Saturday, July 31, 2010

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..



நினைத்தாலே மகிழ்ச்சி பிறக்கும் வார்த்தைகள் எவை எவை என்று யோசிக்கச் சொன்னால் பெரும்பாலானோருக்கு முதலில் தோன்றும் வார்த்தை "நண்பன்". நண்பன் என்ற வார்த்தையை சொன்னவுடன் எவ்வளவு இறுக்கமான ஆட்களுக்கும் கூட மனதிற்குள் அவர்களையும் அறியாமல் ஒரு சந்தோசமும் நம்பிக்கையும் பிறக்கும்.

நம் வாழ்க்கையில் மற்ற உறவுகளை விட நண்பனின் பங்களிப்பு மிகவும் அதிகம். மற்ற உறவுகள் எல்லாம் இரத்தம் சம்பந்தப்பட்டவை. ஆனால் எந்தவித இரத்த சம்பந்தமும் இல்லாமல் உயிருக்கு உயிராய் ஒருவர் மீது நம்பிக்கையும் பாசமும் எப்படி வந்தது?. உயிருக்கு உயிராய் இருக்கும் நண்பர்களைக் கேட்டால் கூட அவர்களுக்கும் இதற்கு பதில் தெரியாது. அதுதான் அதன் சிறப்பே!

ஏன்? நம்மைப்பற்றி அதிகம் தெரிந்திருப்பவர் நிச்சயம் நமது நெருங்கிய நண்பராகத்தான் இருப்பார். ஏன் சில நேரங்களில் நமக்கே தெரியாத நம்மைப்பற்றி நம் நண்பருக்குத் தெரிந்திருக்கும். நாம் மனசுவிட்டு அதிக விசயங்களைப் பகிர்ந்து கொள்வது நண்பர்களிடம் மட்டும்தான்.

இல்லை இல்லை...நான் என் தாயாரிடமோ, தந்தையிடமோ அல்லது மனைவியிடமோ பகிர்ந்துகொள்கிறேன்...எங்களுக்குள் அப்படி ஒரு புரிதல் என்று சொல்பவராக நீங்கள் இருந்தால்...நீங்கள் நிச்சயம் லக்கி! ஏனெனில் நீங்கள் பகிர்ந்து கொள்ளும் அந்த உறவு, தாயார், தந்தை, மனைவி, அண்ணன், அக்கா, தங்கை, தம்பி, யாராக இருந்தாலும் அவர்கள் உங்களது உறவினர் என்பதையும் தாண்டி உங்கள் நண்பர் என்ற வட்டத்திற்குள் நிச்சயம் வந்திருப்பார். நமது நண்பர் என்ற வட்டத்திற்குள் வராத எந்த உறவுகளிடமும் நிச்சயம் நம்மால் எதையும் பகிர்ந்து கொள்ள முடியாது என்பதே உண்மை!

நட்புக்கு முகம் தேவையில்லை. ஏற்கனவே பேசியிருக்கத் தேவையில்லை ஏன் பாத்திருக்கக்கூடத் தேவையில்லை..அதற்கு ஒரு நல்ல உதாரணமாக இந்த வலைப்பதிவுகளைச் சொல்லலாம்..வலைப்பதிவுகளில் பல நண்பர்கள் எழுதி இருப்பதைப் படிக்கும் போது..அது நமது விருப்பங்களுக்கு மிகவும் அருகில் இருக்கும் பட்சத்தில்...அந்தப் பதிவர் மீது ஒரு நட்புணர்வு நம்மையும் அறியாமல் வந்துவிடுகிறது..முகம் தெரியா அந்த நண்பரையும் நம் மானசீக நண்பராக்கிக் கொள்கிறோம்.

                                       பூக்கள் பூக்கும் தருணம்
                                       ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே!

திடிரென இந்த வரிகள் இங்கு எதற்கு என்கிறீர்களா....இவை நட்புக்கும் பொருந்தும்...பூக்கள் பூக்கும் தருணம் போலத்தான் நட்பு பூக்கும் தருணமும்...ஆருயிர் நண்பர்கள் பலரிடமும் கேட்டால் அவர்களுக்குள் நட்பு பூத்த தருணம் நிச்சயம் தெரிந்திருக்காது..

வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.......






பிரியமுடன்

ரமேஷ்